பிரார்த்தனா மூர்த்தி – உமையின் ஊடலை தணிக்கும் சிவன்
சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களை புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்தைக் காத்து அருள்புரிகிறார்.
பிரார்த்தனா மூர்த்தி வடிவம்
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், பிரார்த்தனா மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்விட வடிவமானது உமையின் ஊடலை தணித்த வடிவம்.
- பெயர்: திரிபாதத்ரி மூர்த்தி
- வாகனம்: காளை
- மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
சிவ அவதாரக் காரணம்
தாருவன முனிவர்கள் தவமும், யாகமுமே முக்தி கிடைக்கக் கூடிய வழியென நினைத்திருந்தனர். அவர்கள் சிவபெருமானை வணங்காது செருக்குடன் இருந்தனர். அவர்கள் செருக்கை அழிக்க சிவபெருமான் பிட்சாடனராக மாறி முனிவர்களின் மனைவியர் கற்பையும் அழித்தார்.
திருமால் மோகினி அவதாரத்துடன் முனிவர்களின் தவத்தை அழித்தார். இதற்கெல்லாம் யார்காரணமென தவவலிமையால் முனிவர்கள் உணர்ந்தனர். உடனே அப்சார வேள்வி நடத்தி அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் அனைத்தையும் சிவபெருமான் மீது பிரயோகித்தனர். முயலகன் என்ற அசுரனும் சிவபெருமானை நோக்கி வர அவனது முதுகில் ஏறி நடனமாடி முனிவர்களுக்கு ஞானம் அளித்தார். இச்செய்தியைக் கேள்வியுற்ற உமாதேவியார் வருந்தினார். தாமே சக்தியாக உள்ளோம். அவர் என்னை விடுத்து திருமாலை மோகினியாக்கிச் சென்றுவிட்டாரென்ற செய்தியைக் கேட்டதும், ஓர் திருவிளையாடல் நடத்த எண்ணி ஊடல் கொண்டார்.
இதனையறிந்த சிவபெருமான் சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்தும், அதனைப் போக்க நினைத்தார், அவர் சக்தியிடம் சென்று தேவி எனது ஒரு சக்தியான நீயே செய்கின்ற வேலையைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். அதாவது நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்க்கையாகவும் பிரிகின்றீர்.
எனவே திருமால், காளி, துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்க என்றார். உடன் உமாதேவியார் கோபம் மறைய இறைவா தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக்காட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்.
உடன் சிவபெருமானும் ஆடிக் காட்டினார்; இந்த நடனத்தையே கௌரி தாண்டவம் என்றழைப்பர். தனது ஊடலுக்கு பலமுறை இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் மன்னித்து தன்னுள் ஐக்கியப்படுத்தினார்.
சிவபெருமான் உமாதேவியின் ஊடலுக்கான காரணத்தை விளக்கியதாலும் அவர் நடனம் காண பிரார்த்தித்ததாலும் திருநடனத்தை மறுபடியும் அவர் முன் நிகழ்த்திக் காட்டினார். இம்மூர்த்தியே பிரார்த்தனா மூர்த்தி ஆவார்.
தரிசிக்கும் முறை
இவர்க்குரியத் தலமாக ருத்ரகங்கை குறிப்பிடப்படுகிறது.
Comments
Add a Comment